சுமந்திரன் கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்!

You are currently viewing சுமந்திரன் கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்!

ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றமில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பானது  கொக்குவிலில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

நேற்றைய தினம் சென்னையிலே மலையக முன்னணியின் ஏற்பாட்டில் தொல் திருமாவளவன் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் பங்களிப்புடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மலையக முன்னணியின் தலைவர் இராதகிருஸ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரிய பத்திரிகையாளர் சந்திப்பாக அது காணப்பட்டது. அவர்கள் அனைவரும் அந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது 13 ம் திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்குரிய தீர்வு அல்ல என வலியுறுத்தினர்.

எம்மைப் பொறுத்தவரை சுமந்திரனின் இக் கருத்து ஆச்சரியமல்ல. சுமந்திரன் திட்டமிட்டு தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கொண்டு வரப்பட்டவர். ஆனால் திருமாவளவன் மகேந்திரன் போன்றவர்கள் ஈழப்போராட்டத்தின் போது ஈழத்தமிழர்களுக்காக உறுதியாக குரல் கொடுத்தவர்கள். போராட்ட காலத்திற்கு முன்னர் இவர்கள் இருவரின் வாயால் கூட 13 ம் திருத்தச்சட்டமும் மாகாணசபை முறைமையும் தீர்வு என்று உச்சரித்ததை நான் அறியவில்லை.

அந்தவகையில் அவர்கள் இந்த 13 ம் திருத்தச்சட்டத்தை மத்திய அரசை கோரும் கருத்தானது. எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின்றது. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் சந்திரசேகரன் ஐயா ஈழப் போராட்டத்தை மிகவும் நேசித்தவர். அவர்களின் கட்சியினரும் தனித்துவமாக ஈழத்தமிழர்களுக்காக செயற்பட்டவர். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து வந்த இராதாகிருஸ்ணன் 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தும் செயற்பாடானது வெறுப்புக்குரியது.

இந்தியாவின் மத்திய அரசு 13 ம் திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு இறுதி தீர்வு என்ற நிலை இன்றுவரை தொடர்கின்றது. இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் 13ம் திருத்தச்சட்டத்தை தீர்வுக்கான ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத மறுத்தனர். அதனால் தான் 30 வருடம் போராட்டம் நடைபெற்றது. அவ்வாறு இருக்கையில் அதனை ஆரம்பப் முள்ளியாகக் கருதினால் தமிழர் தரப்பு ஒற்றையாட்சிக்குள் முடங்கிவிடும்.

இதுவரைக்கும் தமிழர் சரித்திரத்திலே ஒற்றையாட்சி முறை கொண்டு வந்த நிலையில் தமிழர் தரப்பு நிராகரித்ததாலேயே இன்றுவரை இலங்கையில் இனப்பிரச்சினை காணப்படுகின்றது. 13 ஐ ஆரம்பப்புள்ளியாக வலியுறுத்தும் தமிழர் தலைவர்கள் என கூறுபவர்கள் அரசின் அடிமையாக செயற்பட்டாலும் இன்று தமிழர் போராட்டத்திற்கு பக்கபலமாக செயலாற்றிய தமிழகத் தலைவர்கள் இன்று நிலை மாறியுள்ளனர்.

தமிழக தலைவர்கள் இன்றுதான் தமிழர் விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்படும் காலகட்டமாக உள்ளது. அதிலும் திருமாவளவன், மகேந்திரன் போன்றோர் இவ்வாறு செயற்படுவது தமிழர்களின் விடயத்தில் ஏமாற்றமளிக்கிறது. அவர்களிடம் கெஞ்சிக் கேட்கின்றோம் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்காது கடந்த 35 வருடமாக தமிழர் நலன் சார்பில் எவ்வாறு செயற்பட்டீர்களோ அந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகள் எவ்வாறு தமிழர் தரப்பின் மீது கரிசனையுடன் உள்ளனரோ அதுபோலவே தமிழக தலைவர்களும் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். மாறாக 13ஐ வலியுறுத்த முற்படும் போது தமிழர்களின் அபிலாசைகளை மத்திய அரசின் ஒற்றையாட்சி முறைக்குள் உள்ளடக்குவதற்கு சோரம் போவதாக அமையும்.தமிழகத் தலைமைகளுக்கு போராட்ட காலத்தை விட தற்சமயம் உரிமைசார் விடயங்களில் பேரம் பேசக்கூடிய ஆற்றல் அதிகரித்துள்ளது. எனவே போராட்ட காலத்தை விட தமிழர்களுக்கு உங்களின் ஆதரவை பன்மடங்காக வழங்க வேண்டும்

தயவு செய்து நாங்கள் தமிழக தலைமைகளிடம் கேட்டுக்கொள்வது ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் நிலைப்பாட்டுக்கு துணைபோகாது ஈழத்தமிழர் நலன் சார் விடயத்தில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.

கடந்த கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் துணை செயளாளர் நாயகம் விக்னராஜா அம்மையார் இலங்கைக்கு விஜயம் செய்தார் அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனின் சந்திப்பை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில்.விக்கிரமசிங்க இன நல்லிணக்கம் இலங்கையில் காணப்படுகின்றது என வெளிநாடுகளுக்கு எடுத்து காட்டியுள்ளார் இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றமில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என்றார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments