இலங்கையில் சிவில் உரிமைகள், அரசியல் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்திக் குரல்கொடுங்கள்!

You are currently viewing இலங்கையில் சிவில் உரிமைகள், அரசியல் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்திக் குரல்கொடுங்கள்!

breaking

இலங்கை பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையில் சிவில் உரிமைகளும் அரசியல் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பிரிட்டன் அரசாங்கம் குரல்கொடுக்கவேண்டும் என்று அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் எர்வர்ட் டேவி வெளிவிவகார செயலாளரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கஜேந்திரகுமாரின் கைது தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் டேவி அந்நாட்டு வெளிவிவகார செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையில் மீண்டுமொரு கரிசனைக்குரிய சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள எட்வர்ட் டேவி எம்.பி, இச்சம்பவம் இலங்கைவாழ் தமிழ்மக்கள் மத்தியிலும் பிரிட்டனில் வசிக்கும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தனது உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், அவரது தந்தையார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியிலேயே கொல்லப்பட்டதாகவும் அக்கடிதத்தில் எட்வர்ட் டேவி தெரிவித்துள்ளார்.

எனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலை குறித்து தகவல் வழங்குமாறும், இவ்விடயத்தில் பிரிட்டன் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்றும் அவர் வெளிவிவகார செயலாளரிடம் கோரியுள்ளார்.

மேலும் தற்போது இலங்கை பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இலங்கையில் சிவில் உரிமைகளும் அரசியல் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பிரிட்டன் அரசாங்கம் குரல்கொடுப்பது அவசியம் என்றும் எர்வர்ட் டேவி எம்.பி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments