ஈரானில் (Iran) இருந்து வெளியாகும் நாளேடு ஒன்றில் அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல் குறித்து மிரட்டல் விடுத்திருந்த ட்ரம்புக்கு, ஈரான் நாளேடு ஒன்று பதிலடியாக இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் இராணுவத்தை தயார் நிலையில் ஈரான் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியும் (ayyid Ali Hosseini Khamenei) ஈரானின் இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளவோ ட்ரம்ப் நிர்வாகத்தால் ஈரானுக்கு கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டது.
ஆனால், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு உடன்பட காமெனி கடுமையாக மறுத்த நிலையில், ஈரான் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்றும் அவர் பதிலளித்தார்.
அந்த அவமதிப்பால் கோபமடைந்த ட்ரம்ப் ஈரானுக்குள் புகுந்து தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்த நிலையில், ஈரான் தனது கொள்கைக்கு இணங்கி அமெரிக்காவுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் மீது குண்டு வீசுவதாக ட்ரம்ப் சூளுரைத்தார்.
இந்தநிலையிலேயே, ஈரான் நாட்டின் மிகப் பிரபலமான நாளேட்டில், ஜனாதிபதி ட்ரம்ப் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் தன்னை படுகொலை செய்தால், அந்நாட்டை முற்றிலுமாக அழித்து விடுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தனது குழுவிற்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் படுகொலை முயற்சி ஒன்றில் ஜனாதிபதி ட்ரம்பைக் கொல்ல சதி செய்ததாக ஈரானிய முகவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது.
அத்தோடு, முன்பிருந்தே ட்ரம்ப் மற்றும் பிற அமெரிக்க நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரான ஈரானிய அச்சுறுத்தல்களை பெடரல் அதிகாரிகள் பல ஆண்டுகளாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.