கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் தூதுவர்களுடன் சந்திப்பு.
இச்சந்திப்பில்
வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும்.
குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளும் உடனடியாக விடுவிக்கப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தையிட்டியில் தனியார்காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டு தூதுவர்களுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பில் பேரவைத் தலைவர்கள் வலியுறுத்தல்.
தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வாராசா கஜேந்திரன்,
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன்,, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத்தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் குறித்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.
சந்திப்புகளை தொடர்ந்து தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாறு தனது கருத்தினை பதிவு செய்தார்.
இன்று தமிழ் தேசிய பேரவையின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் உள்ள தூதுவராலயங்களை சந்தித்து விசேடமாக மூன்று விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தோம்.
இதனடிப்படையில் முதலாவதாக காலை 9.00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருடன் சந்தித்தோம் தொடர்ந்து பிப 1.30 மணியளவில் அமெரிக்க தூதரகத்தில் தூதுவர் ஜீலி சுங் அம்மையாரை சந்தித்தோம். பிப 3.00 மணியளவில்
சுவிஸ் தூதரகத்தில் சுவிஸ் தூதுவருடனும் மூன்றாவதாக சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பொழுது கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சிக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம்.
மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அரசு வெளியிட்ட குறித்த வர்த்தமானியை அரசு மீளப் பெறவேண்டும் எனவும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.
வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்தமான ஆவணங்கள் அழிவடைந்தும் தொலைந்துமுள்ளன. அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம்.
அத்துடன் போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளது. இந்த மக்கள் பயங்கரவாதச் சட்ட அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டினை விட்டு வெளியேறினார்கள்.
இவர்களின் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை. ஆனாலும்
இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபகரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இரண்டாவது விடயம் குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு 79 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே சொந்தமானதென 1932 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிப்படுத்துகிறது. எனினும் அதற்கு மேலதிகமாக 325 ஏக்கர் காணியினை குறித்த தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்க வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் புத்த பிக்கு அரசிடம் கோரியிருந்தார். எனினும் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகள் என்பதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அப்போதய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த 325 ஏக்கரிலும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.
எனினும் வழமைபோன்று குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூன்றுபேர் நீதிக்குப் புறம்பாக கைது செய்பட்டு இரண்டுபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மட்டத்தில் தீர்வு எட்டபட்ட ஓரு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல் விவசாய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வயல்களுக்கு நீர்விநியோகம் செய்ய வேண்டிய குளத்தில் தமிழ் மக்கள் மீன்பிடியில் ஈடுபடவும் தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்துள்ளனர்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள் எதுவும் அற்ற குறித்த பகுதியில் மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதனை உறுதிப்படுத்தவும் அநீதியான முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
மூன்றாவது விடயமாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் . சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் காணிகளை வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது.தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும். காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டுமெனவும் அதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படல் வேண்டுமெனவும் கோரினோம்.
இதேவேளை குச்சவெளி பிரதேசத்தில் தமிழர்களது சுமார் 32 பூர்வீக வரலாற்று அடையாளங்கள் பௌத்த வரலாறாக தொல்பொருட் திணைக்களத்தால் திரிபுபடுத்தபட்டுள்ளது.
அவ்வாறு திரிபுபடுத்திய வரலாற்றை அடிப்படையாக்க் கொண்டு பௌத்த மயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. அதனையும் தடுத்து நிறுத்த அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
வேண்டும் என்பதோடு தொல்பொருள் சின்னங்கள் வரலாற்றை திரிபுபடுத்தாத வகையில் பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது