திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குச்சவெளி கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் படகு மற்றும் சுருக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சுருக்கு வலையை பயன்படுத்தி சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மீன்பிடிக்கக்கூடிய சட்டம் இருப்பதாகவும் அதை மீறி மீன்பிடித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இச் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியி பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது “பாமர மக்கள்மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே”, “தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்” அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.