செப்டெம்பர் ஜெனிவா அமர்வில் இலங்கை குறித்த புதிய பிரேரணை!

You are currently viewing செப்டெம்பர் ஜெனிவா அமர்வில் இலங்கை குறித்த புதிய பிரேரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்படவுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் கால நீடிப்பு தொடர்பிலும் பரஸ்பர கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் பிரித்தானியா தலைமைதாங்கிக் கொண்டுவரவுள்ள விடயத்தினை பென் மெல்லர் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், குறித்த பிரேரணைக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கான சதகமான நிலைமைகள் குறைந்தே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் ‘நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை’ நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணையை கொண்டுவருவதில் பிரித்தானியா கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பை வரவேற்ற சுமந்திரன் அதற்கான அவசியத்தையும், சர்வதேச தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டார்.

விடேசமாக தற்போதைய அரசாங்கம் கடந்தகால தவறுகளை சரிசெய்து முறைமை மாற்றத்தினையே மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது. இவ்வாறான நிலையில் அந்த அரசாங்கத்தினாலேயே அதற்கான இலக்குகளை முன்னகர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, மெல்லர் வடக்கு,கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டதோடு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுமந்திரனிடம் வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருந்த சுமந்திரன், வடக்கு,கிழக்கு மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான நிரந்திரமான தீர்வொன்று இனப்பிரச்சிக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தபோதும் அவற்றை இன்னமும் பூர்த்தி செய்யாத நிலைமை தான் நீடிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில், சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையின் கால எல்லையையும் நீடிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply