கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1209. 22 ஏக்கர் காணிகளை முப்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக மாவட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.
இருந்தபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்களின் காணிகள் மற்றும் திணைக்களங்களுக்குரித்தான காணிகள் இதுவரை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் காணி உரிமையாளர்கள் பலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 653, 65 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
குறிப்பாக அம்பாள் நகர் கிளிநொச்சி நகரம், திருநகர் ஜெயந்தி நகர் இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளில் இவ்வாறு அதிகமான காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலாள பிரிவில் 180, 38 ஏக்கர் நிலப் பகுதிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 116, 61 ஏக்கர் காணிகளும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 248, 18 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளன.
குறிப்பாக பூநகரி பிரதான மையப்பகுதியான வாடியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள சுமார் 14 பேருக்கு சொந்தமான காணிகளும் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் அதன் உரிமையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாளை பூனகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1209, 22 ஏக்கர் வரையான காணிகளை கடந்த 15 வருடங்களுக்கு மேல் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.