புத்தளத்தில் கைதான 35 இந்திய மீனவர்களின் தொடர்ந்தும் விளக்கமறியல்!

You are currently viewing புத்தளத்தில் கைதான 35 இந்திய மீனவர்களின் தொடர்ந்தும் விளக்கமறியல்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் இம்மாதம் 18  ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் குதிரமலை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன உத்தரவிட்டிருந்தார்.

நான்கு  படகுகளில் இந்தியா தமிழகம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக வருகை தந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் 35 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு குதிரமலை கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கடற்படையிரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த நான்கு விசைப் படகுகளும், மீன்பிடிப்பதற்குப் பயண்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக  இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 35 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 35 பேரையும் மேலதிக விசாரணைகளுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 35 இந்திய மீனவர்களும் இன்று  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 35 பேரையும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் இதன் போது உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி கற்பிட்டியின் வடக்கே குதிரமலைப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 22 மீனவர்களில் 12 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் ஒருவருக்கு இருபது மில்லியன் ரூபா வீதம் அபராத தொகையை செலுத்துமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் கடந்த 3 ஆம் திகதி உத்தரவிட்டதுடன், அந்த அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

22 இந்திய மீனவர்ரகளில் 10 பேர் நேற்றைய தினம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதியும் , 5 ஆம் திகதியும் கற்பிட்டி – குதிரமலைப் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 57 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட 57 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments