பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவுள்ளது என்றும், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைக்கலாம் என்றும் அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதற்காக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) ஒன்றுகூடி கலந்துரையாடி இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தது.
அதன்படி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அரசாங்கம் குறிப்பிடுவதைப் போன்று மாற்றுச் சட்டங்கள் அல்லது புதிய சட்டங்கள் அவசியம் இல்லை என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்காமல், தற்போது காணப்படும் குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைக்குக் கீழான ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த விடயங்களை அணுகலாம் என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.