எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டப் பயணமானது இன்று பிரித்தானியாவில் ஆரம்பமாகி உள்ளது.
இன்றிலிருந்து தொடர்ந்து ஐரோப்பியநாடுகளூடாக பயணிக்க விடுதலை உணர்வாளர்கள் உறுதி கொண்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி ஐ நா திடல் முன்பாக அனைத்துலக ரீதியாக மாபெரும் மக்கள் போராட்டத்திற்கான முன்நகர்வுகள் நடை பெற்று வரும் சம காலத்தில் தன்னாட்சிக்கான உரிமைக் குரல் முழங்கிய பிரித்தானிய மண்ணில் இருந்து மிதியுந்துப் பயணம் எழுச்சியோடு இப்போது ஆரம்பமாகியுள்ளது.
இப்பயண ஆரம்பதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இவ் எழுச்சிமிகு போராட்டப்பயணத்தின் அரசியல் விடுதலையின் வேட்கையாக தமிழின அழிப்பிற்கான நீதியும், தமிழீழ மக்களுக்கான தீர்வாக இறைமை கொண்ட தமிழீழ தேசமே இருக்க முடியும் என்பது உறுதிபட எடுத்துரைக்கப்பட்டது.
பணியாளர்களும் உணர்வாளர்களும் இணைந்து கையிலேந்திய தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள் காற்றில் கம்பீரமாக அசைந்த வண்ணம்,கொண்ட கொள்கையின் இலட்சிய உறுதியை பிரித்தானிய தேசத்தில் காட்டி நிற்கின்றது.