உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 73 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 68 மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்ஜனி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மேலும், 5 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்பவத்தில் ஆசிரியர் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன.
இன்று பகல் மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியனவற்றிலிருந்து உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
திடீரென ஏற்பட்ட வாந்தி மற்றும் வயற்றுவலி காரணமாக மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை, புனித மைக்கேல் தேசிய பாடசாலை,கோட்டைமுனை கனிஸ்ட பாடசாலை,கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஒரு உணவு விநியோகஸ்தரே உணவினை தயாரித்துவழங்குவதாகவும் அவரின் உணவு தயாரிப்பு இடத்திற்கு சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த உணவகத்தில் அதிகாலை 04 மணிக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூழல் தொடர்பிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
குறித்த உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.