முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம்!

You are currently viewing முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம்

 10 0

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம்! 1முல்லைத்தீவு  மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு மேதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, இன்று (04.07.2024) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளர் வருகை தந்து நீதிமன்றில் சாட்சியளித்ததுடன் தொடர்ந்து ஊடகவியலாளர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வீ. எஸ். எஸ் தனஞ்சயன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்னர், அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அன்றும் வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகை தரவில்லை. இந்நிலையில் கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிபதிக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடற்படை புலனாய்வாளர் மற்றும் அவரது சாட்சி ஆகிய இருவருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வழக்குகள் இடப்பெற்றிருந்தன.

இருப்பினும், சில காரணங்களால் வழக்கு விசாரணைக்காக தவணை இடப்பட்டு இருந்த நிலையில் (07.04.2024) இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இதன்போது, செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தியதோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை, ஊடகவியலாளார் சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியுள்ளார்.

இருப்பினும், அவர் அதனை மறுத்து அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்ததில் தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸாருக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், கடற்படை அதிகாரியை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவியபோது, அவர் தங்களுடைய நபர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் மறுநாள் மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அரச கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி சண்முகம் தவசீலனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சிறீலங்கா பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments