முல்லையில் தமிழர்களின் காணிகளை அபகரித்து மகாவலி அடாவடி

You are currently viewing முல்லையில் தமிழர்களின் காணிகளை அபகரித்து மகாவலி அடாவடி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக்கிராம தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை வனவளத் திணைக்களம் தமிழ்மக்களைத் துப்பரவுசெய்யவிடாமல் அபகரித்துவைத்திருந்தநிலையில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி தமிழ்மக்களுக்குரிய குறித்த காணிகளை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதுடன், அக்காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்களையும் வழங்கி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அடாவடிச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த அடாவடிச் செயற்பாடு தொடர்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும், கூட்டுறவுப் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் கோரிக்கையும்விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வியாழக்கிழமை (29) இடம்பெற்றது இதில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறிப்பாக முல்லைத்தீவு – கொக்கிளாய் அக்கரைவெளிப்பகுதியிலுள்ள காணிகளுக்கு தமிழ் மக்களே உரித்துடையவர்கள். அந்தப் பகுதிகளிலுள்ள காணிகளுக்கு தமிழ்மக்களிடம் காணிஅனுமதிப்பத்திரங்கள் உள்ளன.

இவ்வாறிருக்க அந்தப் பகுளிகளிலுள்ள தமிழ் மக்களுடைய பூர்வீகக்காணிகளை, அக்காணிகளுக்குரிய தமிழ்மக்களைத் துப்பரவுசெய்வதற்கு வனவளத் திணைக்களம் தடைவிதிக்கின்றது. இந்நிலையில் வனவளத்திணைக்களம் அபகரித்துவைத்துள்ள தமிழ்மக்களுக்குரிய குறித்த காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்து, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது வனவளத் திணைக்களம் வேடிக்கைபார்க்கின்றது.

பொதுவாக காணிக் கட்டளைச்சட்டத்தின்படி ஒரு காணிக்கு இரு ஆவணங்கள் இருந்தால், யாரிடம் காலத்தால் முந்திய ஆவணமுள்ளதோ அவருக்குத்தான் காணிக்கான முழு அதிகாரமுள்ளது.

இவ்வாறாக கொக்கிளாய், கொக்குத் தொடுவாய்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளுக்கு, தமிழ்மக்களிடம் காலத்தால் முந்திய ஆவணங்கள் இருக்கும்நிலையில், குறித்த காணிகளுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பெரும்பான்மையின மக்களுக்கு புதிய ஆவணங்களையும் வழங்கியுள்ளது. இது மிகவும் மோசமான செயற்பாடென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த அக்கரைவெளிப் பகுதிக் காணிகள் கடந்த1971ஆம் ஆண்டு நிலஅளவைசெய்யப்பட்டு தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கு ஏற்கனவே அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏற்கனவே நிலஅளவைசெய்யப்பட்டு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இதுவரை இரத்துச்செய்யப்படவில்லை. அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தின் அனுமதியின்றியே மீள அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த காணிகள் மீளவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அக்காணிகளுக்குரிய தமிழ்மக்கள் தமக்குரிய காணிகளை வழங்குமாறு பிரதேசசெயலகத்திடம் தொடர்ந்தும் கோரிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வனவளத் திணைக்களத்தை விடவும் அதிகாரம்பொருந்திய ஒரு அதிகாரசபையாகக் காணப்படுகின்றது. வனக்கட்டளைச் சட்டத்தைவிடவும் மேலோங்கிய சட்டத்தைக்கொண்டதாக, அதிகாரத்தைக்கொண்டதாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை காணப்படுவதால், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கெதிராக வனவளத் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கமுடியாதுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அக்கரைவெளி உள்ளிட்ட தமிழ் மக்களின் பூர்வீக காணிகளைத் துப்பரவுசெய்யவிடாமல் வனவளத் திணைக்களம் தடுத்துவைத்திருக்கும்போது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அந்தக் காணிகளை அபகரித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதையும், வனவளத் திணைக்களம் அதனை வேடிக்கை பார்த்துவிட்டு இங்கு காரணங்களைக் கூறிக்கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகமாக அதிகாரங்கள் இருக்கின்றதென்பதற்காக இவ்வாறு அடாவடித்தனமாகச் செயற்படுவதையும் ஏற்கமுடியாது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் மிகமோசமான இந்த அடாவடிச்செயற்பாடுதொடர்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது தமிழ் மக்களின் காணிகளை எமது மக்களிடமே மீளவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுதொடர்பில் முல்லைத்தீவுமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும், கூட்டுறவுப் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவும் கவனஞ்செலுத்தவேண்டுமெனவும் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply