யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற கனரக வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த சிறீலங்கா காவற்துறையினர் நிறுத்த முயற்சித்த போது குறித்த கனரக வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளது.
இதையடுத்து சிறீலங்கா காவற்துறையினர் குறித்த கனரக வாகனத்தை தமது வாகனத்தில் துரத்திச் சென்ற நிலையில் லொறி வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாக சென்றது.
இதன் போது லொறியில் பயணித்தவர்கள் சிறீலங்கா காவற்துறையினரின் வாகனத்தை நோக்கி டோர்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்.
இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் சிறீலங்கா காவற்துறையினர் கனரக வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடியாதாக கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற லொறியை கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.