யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் தவறுதலாக விழுந்து பலியாகியுள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
நேற்றையநாள் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
முல்லைத்தீவு, விஸ்வமடு ரெட்வனா பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்ற தாய் மாமனுமே உயிரிழந்தனர்.
கிணற்றினுள் குழந்தை மிதந்து கிடப்பதை அவதானித்தவர்கள் குழந்தையை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். இருப்பினும் குழந்தை உயிரிழந்தது.
சம்பவத்தை அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற சிறீலங்கா காவற்துறையினர் குழந்தையின் மாமனை மீட்டு முதலுதவி அளித்தபோதும் அவரும் உயிரிழந்துள்ளார்.
பின்னர் இரண்டு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.