யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றினால் பெருமளவானோர் உயிரிழந்து வருகின்ற நிலையில் சடலங்களை தொடர்ந்தும் தேக்கிவைத்து பராமரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.
கடந்த 2ஆம் திகதி உயிரிழந்தவர்களின் சடலங்களை எதிர்வரும் 09ஆம் திகதியே தகனம் செய்யமுடியும் என்று இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் ஐந்து சடலங்கள் என்ற அடிப்படையில் சடலங்கள் எரியூட்டப்படுவதால் சிக்கல் நிலவுவதாக தெரியவருகிறது.
நாள் தோறும் ஐந்துக்கும் அதிகமான மரணங்கள் கடந்த நாட்களில் இடம்பெற்றிருக்கின்றன.
இதன் அடிப்படையில் 30இற்கும் அதிகமானோரின் சடலங்கள் தேங்கியிருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ள வடக்கு சுகாதாரத் திணைக்களம் சடலங்களை தொடர்ந்தும் பராமரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது