யாழ். குடாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பி.சி.ஆர். பரிசோதனையில் கோவிட் நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று 48 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 36 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 09 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.