வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடபு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக 14 விசேட மையங்களை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார்.