வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில், இராணுவத்தினரின் அறிவுறுத்தலின் பேரில், சிறீலங்கா காவற்துறையினர் மிகவும் அதிகார துஸ்பிரயோகமாக நடந்து கொள்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் (28.02.202)5 நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்,
“நாங்கள் சிறீலங்கா இராணுவத்துக்கும், சிறீலங்கா காவற்துறைக்கும் இடையில் வேறுபாட்டைக் காணமுடியவில்லை.
அதனால் எனது இந்த பாதுகாப்பு தொடர்பான பகுப்பாய்விற்காக இரண்டையும் சேர்க்க விரும்புகிறேன்.
வரவுசெலவுத் திட்டத்தில் இராணுவ வீரர்களுக்கு 27 வீதம் முதல் 33 வீதம் வரை கணிசமான சம்பள உயர்வையும் வழங்குகிறது. அரசாங்கம் பாதுகாப்பு விடயத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளமையானது பாதுகாப்பு படைகளை அதிகரிக்க விரும்புகிறது என்பதையே காட்டுகிறது.
16 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவுக்கு வந்தது. இன்று இங்கு போரில்லாதபோதும், அந்த துறையை மேம்படுத்தும் எண்ணம் உள்ளது.
இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறையாக 6.7 வீதம் உள்ளபோதும் ஐ.எம்.எவ். நிர்ணயித்த இலக்கு 5.2 வீதமாகும்.
மேலும் அரசாங்கம் தனது வருவாய் சேகரிப்பை ஜி.டி.பியில் 15.1 வீதமாக அதிகரிக்க வேண்டும், அடுத்த ஐ.எம்.எவ். வின் பிணையெடுப்புக்கு தகுதி பெற வேண்டும்” என்றார்.