வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரிகள் விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டு கார்களுக்கு அதிக வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஓவல் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி முதல் 25% வரிகள் விதிக்கப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் வரி வசூல் துவங்கும். இந்த புதிய வரி விதிப்பு நிரந்தரமாக இருக்கப் போகிறது.
அமெரிக்க பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் மேம்படுத்துவதே புதிய வரி விதிப்பின் நோக்கமாகும். இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இது நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத வளர்ச்சியைத் உருவாக்கும்.
வாகன கட்டணக் கொள்கையை வடிவமைப்பதில், டி.ஓ.ஜி.இ., குழு தலைவர் எலான் மஸ்கிற்குஎந்த தொடர்பும் இல்லை. வாகனங்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து எலான் மஸ்க் ஆலோசனை வழங்கவில்லை. புதிய வாகனத் துறை வரிகள் மிக விரைவில் வரும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.