பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழ்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அந்த தங்க படிமம் பாகிஸ்தானுக்கு ஒரு பொருளாதார உயிர் நாடி மட்டுமல்ல, அதற்கு பக்கத்தில் உள்ள நாட்டுடன் எதிர்பாராத இணைப்பையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு, புதிய வளத்தை வெட்டி எடுப்பதற்கான பெரிய திட்டங்களில் ஈடுபட தூண்டுகோளாக அமைந்துள்ளது. இது நெருக்கடியில் உள்ள அந்நாட்டு பொருளாதாரத்துக்கு ஊக்கத்தையும் நம்பிக்கை உணர்வையும் கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் ஆலோசனை நிறுவனமான ‘தேசிய பொறியியல் சேவைகள் பாகிஸ்தான்’ (நெஸ்பாக்), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை ஆகியவை இணைந்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, சிந்து நதி பகுதியில் 9 தங்க தொகுதிகளுக்கான சுரங்க உரிமைகளை ஏலம் விடுவதற்கான ஆவணங்களை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது பாகிஸ்தானின் சுரங்க துறைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தின் தொடக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அங்கு காணப்படும் தங்க படிமங்கள் இந்தியாவின் இமயமலைப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆற்றின் நீரோட்டம் தங்க துகள்களை கீழ் நோக்கி கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அது அங்கு படிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஆற்றின் ஓட்டம் இந்த தங்க கட்டிகளை வட்டமாகவும் மென்மையைகவும் மாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவற்றை பிரித்து எடுப்பது எளிது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.