ஆளும் கூட்டரசில் விரிசல்! தள்ளாடும் நோர்வே அரசு!!

You are currently viewing ஆளும் கூட்டரசில் விரிசல்! தள்ளாடும் நோர்வே அரசு!!

வலதுசாரிக்கட்சியின் தலைமையிலான, நோர்வேயின் ஆளும் கூட்டரசிலிருந்து மிக முக்கிய பங்காளிக்கட்சியான “FrP” கட்சி அரசிலிருந்து வெளியேறியுள்ளதால், அரசு பலமிழந்து சிறுபான்மை அரசாக மாறியுள்ளது!

சிரியாவில் தங்கியிருந்த, “ISIS” அமைப்போடு தொடர்புகளை வைத்திருந்ததாக சொல்லப்படும், நோர்வே குடியுரிமை பெற்றிருந்த பெண்ணொருவரையும், அவரது இரு குழந்தைகளையும் நோர்வேக்கு திருப்பியழைத்துக்கொண்ட விவகாரத்திலேயே அரசில் பிளவு ஏற்பட்டுள்ளது.

“ISIS” அமைப்போடு இணைந்து செயற்படுவதற்காக நோர்வேயிலிருந்து சென்ற அனைவரும் பயங்கரவாதிகளாகவே கருதப்படவேண்டும் என்ற கொள்கையில் FrP கட்சி உறுதியாக இருந்தது. எனினும், சர்ச்சைக்குரிய குறித்த பெண்ணை பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவதில் ஒப்புதல் கொண்டிருந்த பிரதமர் “Erna Solberg” அம்மையார், சிரியாவிலுள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் குழந்தைகள் கடும் சுகவீனமுற்றிருந்த நிலையில், குழந்தைகள் மேல் நோர்வே அரசு கரிசனை கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் குறித்த பெண்ணையும், அவரது இரு குழந்தைகளையும் அதிரடியாக மீட்டு நோர்வேக்கு கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

ISIS அமைப்போடு தொடர்புடையவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக கருதப்படவேண்டும் என்பதோடு, குறித்த பெண்ணை திரும்பவும் நோர்வேக்கு அழைத்துவருவதற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த FrP கட்சி, இவ்விடயத்தை எதிர்த்து அரசிலிருந்து வெளியேறியுள்ளது.

FrP கட்சிசார்பில் அமைச்சரவையில் அங்கம் வகித்த ஏழு பேர் அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், கூட்டரசில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளிலிருந்து தகுதியானவர்களை வெற்றிடமாகியுள்ள அமைச்சுப்பொறுப்புக்களுக்கு நியமிப்பதில் பிரதமர் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.

பகிர்ந்துகொள்ள