வவுனியா
ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (07 ) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் அரணின் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து நிலையத்தை அடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கோட்டபாய பதவி விலகு, இந்த அரசாங்கம் வேண்டாம், அமெரிக்காவுக்கு ஓடுங்கள், எங்களை வாழவிடு’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களையும் எழுப்பியதுடன் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் சகோதரர்களான மஹிந்த, பசில் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.
மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேரூந்து நிலையம் என்பவற்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் அரை மணிநேரம் பிரதான வீதியை மறித்தமையால் ஒரு வழிப் பாதையூடான போக்குவரத்துக்களை பொலிசார் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டிருந்தனர்.
சங்கானை
யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகம் முன்பாக இன்று 07 ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சங்கானை பிரதேச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கந்தளாய்
சிறீலங்காவின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு நாடு பூராகவும் இடம் பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (07.04.2022) கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இனவாதத்தால் நாட்டை நாசமாக்கியது போதும், எமது சிறார்களுக்காய் இலங்கையை பாதுகாப்போம், லோன் லீசிங் செலுத்த முடியாது நிவாரணம் வழங்கு, 74 வருட அரசியல் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் போன்ற வாசகங்களை ஏந்தியும் ஹோ ஹோம் ஹோட்டா போன்ற வாசகத்தையும் ஏந்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.


பின்னர் பிரதான வீதி வரை கோசங்களை எழுப்பி நடை பவணியாக தங்களது ஆதங்கங்களை அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். இதில் பொது மக்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.