ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் ; 34பேர் பலி!

  • Post author:
You are currently viewing ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் ; 34பேர் பலி!

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள தீவுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 800 மீன்பிடித் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

சீனாவைத் தொடர்ந்து ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  பிப்ரவரி 19-ஆம் தேதி ஈரானில் இந்த வைரஸ் இரண்டு பேருக்கு பரவியது. தற்போது ஈரானில் வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. சீனாவைத் தவிர்த்த மற்ற நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இதுவே அதிகமாகும். 

ஈரானில் துணை அதிபர்களில் ஒருவரான மசூமே எப்டகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை துணை அமைச்சரான இராஜ் ஹரிர்ஜி மற்றும் ஒரு எம்.பிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஈரானில்  388 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஈரானில் இருந்து பல நாடுகளுக்கும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 
 
புனித நகரமாக கருதப்படும் கோம்  நகரில் இருந்து கொரோனா பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது.
ஈரானில்  மீன்பிடித் தொழில் செய்யும் தமிழர்கள் தங்களை மீட்டு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் 800 பேர் அங்குள்ள தீவுகளில் தவித்து வருகின்றனர். கீஸ் தீவு, சிங்கா தீவு உள்ளிட்ட 4 தீவுகளில் தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள