ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வங்கி ; கொரோனா!

  • Post author:
You are currently viewing ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வங்கி ; கொரோனா!

ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனா தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

குறிப்பிட்ட டி.பி.எஸ். வங்கியின் ஊழியர் செவ்வாய்க்கிழமை பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் வேலை செய்த குறிப்பிட்ட தளத்தில் வேலை செய்யும் 300 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்று அந்த வங்கி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிக்கலான இத்தருணத்தில் குறிப்பிட்ட ஊழியருக்கும், அவரது குடும்பத்துக்கும் தேவையான எல்லா ஆதரவையும், வழிகாட்டுதலையும் வங்கி அளிக்கும்,” என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, எல்லா நிறுவனங்களும், பொது இடங்களும், தங்கள் ஊழியர்களை, வருகை தருவோரை, காய்ச்சல் இருக்கிறதா என்று சோதிக்கத் தொடங்கியுள்ளன.

கோவிட்-19 என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படத் தொடங்கியுள்ள இந்த நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சீனாவில் 1,100ஐக் கடந்துள்ளது. எனினும், புதிதாகக் கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மட்டுப்படத் தொடங்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள