சந்திப்புகளை தொடங்கியது ஐரோப்பிய ஒன்றிய குழு!

You are currently viewing சந்திப்புகளை தொடங்கியது ஐரோப்பிய ஒன்றிய குழு!

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதா ? இல்லையா? என்பது பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக வந்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்புடன் நேற்று தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுகீஸ்வர குணரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை கொழும்பில் தங்கியிருந்து தமது மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவில் வர்த்தகம் மற்றும் நிறைபேறான அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் நிக்கோலாவோஸ் ஸைமிஸ், ஐரோப்பிய வெளியகசேவையின் தெற்காசியப்பிராந்தியப்பிரிவின் தலைவர் ஐயொனிஸ் ஜியோக்கரகிஸ் அர்ஜிரோபோலொஸ், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக விவகாரங்கள் சபையின் தலைவர் லூயிஸ் ப்ரற்ஸ் மற்றும் ஐரோப்பிய வெளியகசேவையின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அலுவலக அதிகாரி மொனிகா பைலெய்ற் ஆகிய ஐவர் உள்ளடங்குகின்றனர்.

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு மற்றும் சட்டவாட்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய தகைமைகளைப் பூர்த்திசெய்யும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஓர் சலுகையே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையாகும். இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளடங்கலாக 8 நாடுகள் இவ்வரிச்சலுகையின் மூலம் பயனடைந்துவருகின்றன.

இருப்பினும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பித்ததுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதாக வாக்குறுதியளித்து 2017 ஆம் ஆண்டில் அவ்வரிச்சலுகையை மீளப்பெற்றுக் கொண்டது.

எனினும் ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு பயங்கரவாத்தடைச்சட்டம் நீக்கப்படாமை மற்றும் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைவரங்களைச் சுட்டிக்காட்டி, இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஜுன்மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு மேற்படி வரிச்சலுகையை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பான மதிப்பீட்டுப்பணிகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகைதந்துள்ளது.

இவ்வாறு நாட்டிற்கு வருகைதந்துள்ள பிரதிநிதிகளின் விபரம் மற்றும் நாட்டில் தங்கியிருக்கும் காலம் உள்ளிட்ட தகவல்களை வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுகீஸ்வர குணரத்னவிடம் கேட்டறிய முற்பட்டோம்.

இருப்பினும் இதுவோர் இராஜதந்திர மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஜயம் என்பதனால், அவர்கள் நாட்டில் எவ்வளவு காலம் தங்கியிருந்து தமது மதிப்பீட்டுப்பணிகளை மேற்கொள்வார்கள் என்பது இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட சுகீஸ்வர குணரத்ன, அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்திப்பார்கள். இருப்பினும் அதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments