சிங்கள மக்கள் விரும்பும் தீர்வையே வழங்க முடியும்!!

You are currently viewing சிங்கள மக்கள் விரும்பும் தீர்வையே வழங்க முடியும்!!

சிங்கள மக்கள் விரும்பும் தீர்வையே தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுக்கு தெரிவித்துள்ளார். 

அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச முதலீடுகள், அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில்,

அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக்கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அபிவிருத்திதான் மிகவும் அவசியம்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். மூவின மக்களுக்கும் சம உரிமையுடனான தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாக இருக்கும்.

ஏனெனில் கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி – ரணில் தலைமையில் தலைவிரித்தாடிய ஊழல், மோசடி ஆட்சியை மாற்றியமைத்ததில் சிங்கள மக்களுக்குப் பெரும் பங்குண்டு.

அதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை நாம் புறக்கணிக்கமாட்டோம். அவர்களையும் அரவணைத்துக் கொண்டு சிங்கள மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள