சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு, இன்றைய விடுதலை தீபம்!!

You are currently viewing சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு, இன்றைய விடுதலை தீபம்!!

சிறந்த தளபதிதிறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு அவர்களின் நினைவில்

சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு, இன்றைய விடுதலை தீபம்!! 1

லெப்.கேணல் வேணு

“கண்ணிவெடித் தாக்குதல் நடந்ததாம்; பத்து ஆமி செத்துப் போனாங்களாம்”

இரண்டு வரிகளில் இந்தச் செய்தி முடிந்து விடும். ஆனால் இதனுடைய பெறுமதி – இதன் பரிமாணம் – மிகப்பெரியது.

இதே வேளை கண்ணிவெடித் தயாரிப்புகளில் – முயற்சிகளில் நாம் இழந்துள்ள செல்வங்களின் பெறுமதியை நினைத்தால் கைதடி – அடம்பன் – நீராவியடி – வஞ்சியன்குளம்….. என்ன தவறு நடந்தது?

பெரும்பாலும் இதனைச் சொல்வதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட எவருமே மிஞ்சுவதில்லை.

இவ்வாறான சம்பவங்களில் ஒன்றுதான் மன்னாரை அதிரப்பண்ணிய வஞ்சியன் குளம் விபத்து. மன்னார்ப் பிராந்தியத் தளபதி லெப். கேணல் வேணு, மேஜர் குகன், மேஜர் சயந்தன், கப்டன் குட்டிமணி ஆகியோரை எம்மிடமிருந்து பறித்தெடுத்த சம்பவம் அது.

பூநகரியிலிருந்து முள்ளிக்குளம் வரையிலான இந்தப் பிராந்தியத்திலுள்ள மக்கள் அனைவருக்குமே இவர்கள் நன்கு பரிச்சயமானவர்கள். ஆகையால் இவர்களின் இழப்பு இப்பிராந்தியத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிரொலித்தது.

இச்சந்தர்ப்பத்தில் எம்மால் இழக்கப்பட்டவர்களுள் ஒருவரான கப்டன் குட்டிமணி பேசாலையைச் சேர்ந்தவன். 1988 ஆம் ஆண்டு இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் எம்முடன் இணைந்து கொண்டவன். பயிற்சி முடிந்ததும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பிரிவில் பணிபுரிந்தான். கண்ணிவெடிகள் வைப்பதில் கைதேர்ந்தவன். இந்தக் காடும், வெளியும் எமக்கே சொந்தம் என்பதை மிதிவெடிகள் மூலம் இந்திய இராணுவத்தினருக்கு உணர்த்திக் காட்டியவன். சொந்தக் காலுடன் வந்த இந்திய இராணுவத்தை செயற்கைக் காலுடன் அனுப்பி வைத்தவன்.

மேஜர் குகன் – மேஜர் சயந்தன் இருவருமே 1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயக்கத்துடன் இணைந்து கொண்டவர்கள். இவர்களில் குகன் மன்னார்ப் பிராந்தியத்திற்கு அப்பாலும் அநேக போர்க்களங்களைக் கண்டவன். இந்திய இராணுவம் எமது மக்கள் மேல் போர் தொடுத்த போது அதை யாழ்ப்பாணத்தில் பல களங்களில் எதிர் கொண்டவன். முதன்முதல் இந்தியப் படையை ஆயுதங்களுடன் சரணடையச் செய்த தாக்குதலிலும் பங்குபற்றியவன். கொண்டச்சிஇ கஜூவத்தை, வஞ்சியன்குளம் என பல்வேறு இடங்களிலும் சிறீலங்காப் படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியவன்.

ஒருமுறை இராணுவ நிலைகளை வேவு பார்க்கச் சென்ற போது இளைய தோழன் ஒருவனால் இவனது பிரத்தியேக ஆயுதம் இழக்கப்பட்டது. அந்தச் செய்தி மட்டும் தான் விசேட தளபதி சுபனைச் சந்தித்தது.

அடிபட்ட புலியாக திரிந்த இவன் மிகவும் ஆபத்தான பகுதி ஒன்றில் இரவு நேரம் வந்து கொண்டிருந்த ஜூப் ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்து இவ்வண்டி எரிந்து கொண்டிருக்கையில் நாலுக்கு மேற்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றி அவற்றுடன் சென்று தான் விசேட தளபதியைச் சந்தித்தான். இதுதான் புலிகளுக்கேயுரிய பாரம்பரியம். இந்த வழிவழியாக வந்த சொத்து என்னிடமும் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியவன்.

உப்புக்குளத்தைச் சேர்ந்த மேஜர் சயந்தன் தளபதி வேணுவுடன் இணைந்து மருத்துவக் குழுவில் பணியாற்றியவன். அத்துடன் போர்க்களத்தில் பணியாற்றத் தகுதி படைத்த சாரதியுமாவான். நீண்ட காலம் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களே வியக்கும் வண்ணம் மருத்துவப் பணிகளை ஆற்றியவன். தம்பளையில் நிகழ்ந்த சண்டையில் காயமடைந்த போராளிகளைக் காப்பாற்றி வாகனத்தில் கொண்டு செல்லும் போது குண்டு வீச்சு விமானம் ஒன்று அந்த வாகனத்தைத் துரத்தித் துரத்திக் குண்டுகளைப் போட்டது. “எனது வேகத்திற்கேற்ப குண்டு வீசுவதற்கு இனிமேல் தான் நீங்கள் பழக வேண்டும்” என்ற செய்தியை உணர்த்தும் வகையில், மிகவேகமாக வாகனத்தைச் செலுத்தி வந்து அவர்களைக் காப்பாற்றியவன்.

“ஆட்காட்டி வெளி” இந்தப் பெயரைக் கேட்டாலே சிங்கள இராணுவத்திற்கு மூக்குச் சிவக்கும். பொதுவாக அடம்பனுக்கு அப்பாலுள்ள இடங்கள், அவர்கள் வரைபடத்திலும் உயர இருந்து விமானம் மூலமே பார்க்க வேண்டிய பகுதிகளாகும். இப்பகுதிகளுக்குள் கால் வைக்க முனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிங்கள இராணுவத்தினர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடியான தாக்குதல் நடக்கும். இங்கு தான் மன்னார்ப் பிராந்தியத் தளபதி வேணுவும் உருவானான்.

1984 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொண்ட இவன் மன்னார்த் தளபதியாக விளங்கிய லெப். கேணல் ராதாவின் பயிற்சி முகாமில் உருவாகியவன்.

மன்னார்த் தீவினுள் சிறீலங்கா இராணுவம் எமது இரு போராளிகளைச் சுட்ட போது மன்னார்க் கோட்டைக்குப் பக்கத்தில் லெப். கேணல் ராதாவின் தலைமையிலான அணி பதிலடி கொடுத்தது போல, 1988 ஆம் ஆண்டு அடம்பனில் எமது இரு போராளிகளைக் கைது செய்த சிறீலங்கா இராணுவம் இவர்களை இந்திய இராணுவத்திடம் கையளித்ததிற்கு பதிலடி கொடுக்கத் தீர்மானித்தான். அடம்பன் முகாமுக்கு மிகக் கிட்டிய தூரத்தில் ஜூப்பில் வந்த சிறீலங்காப் படை உயர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி இராணுவ ரீதியில் பதிலடி கொடுத்தான்.

பயிற்சி முகாமிலிருந்து வெளிவரும் போது இவன் ஒரு வைத்தியனாகவே வந்தான். விஞ்ஞானப் பிரிவில் அவன் கற்ற கல்வி மருத்துவப் பயிற்சிகளை அவன் பெற்றுக் கொள்வதற்கு பெரிதும் உதவியது. இவன் பங்கு கொண்ட முதற் தாக்குதல் மன்னார் மாவட்ட போராளிகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும்.

மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாகச் சென்றான். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்த வரை இவனே டாக்டர். ஆனாலும், இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் தனது முத்திரையைப் பதிக்க இவன் தவறவில்லை.

17. 01. 1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி லெப். கேணல் விக்ரரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவனும் ஒருவனாக இருந்தான். “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்ற நிலையில், ஓடிய இராணுவம் நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது.

பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே மன்னார் – அடம்பன் போன்ற வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இவனோ இந்த நிலையை மாற்றி மக்களைத்தேடி மருத்துவம் செய்யும் மருத்துவனானான். ஆட்காட்டி வெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்குப் பாத்திரமானான். இரவு – பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ போராளிகளுக்கோ வேணுதான் டாக்டர்.

சிறந்த தளபதி – திறமையான மருத்துவர் லெப்.கேணல் வேணு, இன்றைய விடுதலை தீபம்!! 2

இக்காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானான் வேணு. அவர்களோடு அவன் பழகிய விதம் – மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பனதான், குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் இவன் மறைந்த போது உனக்குச் சொந்தங்கள் நிறைய உண்டு எனக் கூறிற்று. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள்.

07. 11. 1989 அன்று வில்பத்துக் காட்டில் “பச்சைப் புலிகள்” எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலை இவன் முறியடித்த விதம் சாதனைக்குரியதாகும். பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் தனது தோழர்கள் 14 பேருடன் பயணமாகிக் கொண்டிருந்தான் இவன். அப்போது, மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள்மேல் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர் – பாதகமான நிலைகளில் போராளிகள். ஆனாலும் இவன் எதிர்த்தாக்குதல் தொடுத்தான். சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினான். அதனால், உயிரிழந்த தமது சகா ஒருவனைக்கூட விட்டு விட்டு சிறீலங்காப் படை தப்பியோடியது. உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி வந்தான் இவன். இத்தாக்குதலில் ஈடுபட்ட அணிக்குத் தலைவனும் இவனே. வைத்தியனும் இவனே.

இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதி இவனை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது. இயக்கத்தின் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவன் இவன்.

1991 ஆம் ஆண்டு இவன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு.

அன்று அது ஒரு கொடிய நாள். ஏற்கெனவே மிகப்பெரிய வெற்றிகளையெல்லாம் (60 இராணுவத்தினர் பலியான சம்பவம் உட்பட) எமக்குத்தந்த வஞ்சியன் குளத்தில் எமக்கு ஒரு சோகம் காத்திருந்தது. சிறந்த தளபதி – திறமையான மருத்துவன் – மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான வேணுவை இழந்தோம்.

அவனுடன், மேஜர் சயந்தன், மேஜர் குகன், கப்டன் குட்டிமணி என்று நால்வரை – எங்கள் நான்கு கண்மணிகளை வெடிமருந்து விபத்தில் நாம் இழந்தோம்.

நினைவுப்பகிர்வு: சுரேஸ்
விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1992).

பகிர்ந்துகொள்ள