சிறீலங்கா காவற்துறை பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!- கஜேந்திரகுமார் எச்சரிக்கை.

You are currently viewing சிறீலங்கா காவற்துறை பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!- கஜேந்திரகுமார் எச்சரிக்கை.

மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர், அவரது மகன் உட்பட 10 பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர், நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர். இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 25, 27ஆம் திகதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தினத்தில் மாவீரர்களை நினைவுகூரலாம் என அரசாங்கமே தெரிவித்து விட்டு வடக்கு, கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிஸார் முயற்சி எடுத்தபோது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவுகூருவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதேவேளை விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் நினைவேந்தலை நடத்த முடியும் என கட்டளை வழங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நினைவேந்தலில் கலந்து கொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்துக்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அப்பட்டமாக சிறி லங்காவின் மோசமான சட்டங்களுக்கு ஊடான ஒரு செயற்பாடு.

இருப்பினும், இந்த கைதானது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கின்றனவே தவிர சட்ட காரணங்களுக்காக அல்ல என்பது மிக அப்பட்டமாக தெரிகின்றது.

அந்த வகையில், நாங்கள் கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் சந்தித்து பேசியபோது, அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ரீதியில் மேலதிகமான சட்ட நடவடிக்கை வேண்டும் என்றனர்.

எனவே பொலிஸ் சட்ட ரீதியாக நடந்து கொள்கின்ற பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் மக்கள் நியாயமில்லாத சிறிலங்கா பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாமல் நடந்து கொண்ட போதும், அவர்கள் குறிவைக்கப்படுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியான நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அதேவேளை, நாங்கள் விளங்கிக்கொண்டு இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாமல், இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments