சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

You are currently viewing சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்!

கொரோனா வைரஸ் தொற்றை தெரிந்தே பரப்பியிருந்தால், சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்தாண்டு வூஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்தே சீனா வெளிப்படையான தகவல்களை அளிக்கவில்லை என ட்ரம்ப்பும் , அமெரிக்க மூத்த அதிகாரிகளும் குற்றம்சாட்டி வந்தனர்.

அதன் வெளிப்பாடாக, சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப்,

கொரோனா வைரஸ் பரவ துவங்குவதற்கு முன் சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்தப்படாததால், ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறு. ஆனால் அவர்கள் தெரிந்தே பொறுப்பாளர்களாக இருந்தால், பின்விளைவுகள் இருக்க வேண்டும் என்பது உறுதி என்றார்.

என்ன மாதிரியான விளைவுகள் என்பது குறித்து ட்ரம்ப் விரிவாக குறிப்பிடவில்லை. கொரோனா விவகாரத்தில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு முதலில் பாராட்டு தெரிவித்த ட்ரம்ப் , திடீரென தடாலடியாக சீன வைரஸ் என குறிப்பிடவே, பதிலடியாக அமெரிக்க இராணுவம் தான் கொரோனா வைரஸை பரப்பியதாக சீனாவும் பரஸ்பரம் புகார் கூற, இருபெரும் பொருளாதார நாடுகளிடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்தது.

மேலும் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவ துவங்கியதா என கேள்வி எழுப்பியுள்ள ட்ரம்ப் , அது குறித்து தனது அரசு விசாரிக்க இருப்பதாவும், சீனாவின் கொரோனா இறப்பு விகிதம் குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனை ‛ஸ்லீப்பி ஜோ
என மறைமுகமாக குறிப்பிட்டு, ஜோ பிடென் வெள்ளை மாளிகையை வென்றால், சீனா மற்றும் இதர நாடுகள் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுமென வெள்ளை மாளிகை சந்திப்பை பிரசார மேடையாகவும் ட்ரம்ப் பயன்படுத்தி உள்ளார்

பகிர்ந்துகொள்ள