யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அதனை உடனடியாக அகற்றக்கோரி இன்று காலையில் இருந்து மதியம் வரை உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிட்டுள்ளது.
வணிக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் சந்தை வியாபாரிகள் அனைவரும் இதற்கான ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மதுபானசாலை திறக்கப்பட்ட போது, அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மூடப்பட்டது. எனினும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரான டக்ளஸ் தேவானந்தாவின் உத்தரவின் பேரில், இந்த மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். எனினும், அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.