டெல்லியில் மீண்டும் பாரிய விவசாயிகள் போராட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

You are currently viewing டெல்லியில் மீண்டும் பாரிய விவசாயிகள் போராட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

டெல்லியில் நாளை  போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள விவசாயிகள் கோரவுள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை தடை செய்யக்கோரி டெல்லி-அரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு தடை செய்தது.

இந்த நிலையில், டெல்லியில் மற்றுமொரு பாரிய விவசாயிகள் போராட்டத்தை நடத்த சம்யுதா கிஷான் மோச்சா மற்றும் கிசான் மஸ்டோர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில் நாளை மறுதினம் (13) சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வர திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனரக வாகனங்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், உத்தரபிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், டெல்லிக்கு அருகே உத்தர பிரதேசத்தின் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் அறிவித்துள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நித்யானந்த ராய், அர்ஜுன் முண்டா ஆகியோர் நாளை சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் விவசாயிகள் போராட்டம் நடைபெறாது எனவும், இல்லையேல் நாளை மறுதினம் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments