பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் நேற்றுக்காலை 9 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.
திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான ஒருவரே கோடரியால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாக்குதலுக்கு தொழில்போட்டியே பிரதான காரணம் என மக்கள் தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் முன்பும் அச்சுறுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.