தொடரும் சிறீலங்கா இராணுவத்தின் அச்சுறுத்தலும் அடாவடித்தனமும்!

You are currently viewing தொடரும் சிறீலங்கா இராணுவத்தின் அச்சுறுத்தலும் அடாவடித்தனமும்!

மனிதவுரிமைகள் ஆணையாளர் இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு
திருகோணமலை
21/04/2020

பெயர்:- கந்தையா காண்டீபன் (பண்பரசன்)

அ.அ.இல.810806052V

முகவரி : இளக்கந்தை வீதி, வீரமாநகர், தோப்பூர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களையுடைய நான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட ஒரு முன்னாள் போராளி (வழ.இல.BR359/2012)
தற்போது நான் மேற்குறிப்பிட்ட முகரியில் வசித்து வருகிறேன். மனைவி மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பொதுச்சுகாதார மருத்துவ மாதுவாக கடமையாற்றுகிறார். எமக்கு மூன்று வயதுடைய ஆண் பிள்ளையும் இருக்கிறார்.

நான் மருதம் சனசமூக நிலையத்தின் செயலாளராகவும் கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் சுகாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிப்பாளராகவும் இருப்பதோடு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். நேற்றைய தினம் (20/04/2020) இரவு 9.24 மணியளவில் என்னுடைய வீட்டுக்குள் ரகசியமாக உள்நுழைந்த இராணுவ வீரர் ஒருவர் வீட்டின் மின் விளக்குகளை அணைத்து விட்டு படுக்கையறைக்குள் நுழைந்து என்னை வெளியே போகுமாறு பணித்தார்.ஏன் எதற்கு எனக் கேட்ட போது அச்சுறுத்தியதுடன் என்னுடைய தொலைபேசியினையும் பறித்தெடுத்தார்.வெளியே வந்து பார்த்த போது வெளியே இருந்த மின்குழிழ்களை அணைத்து விட்டு முற்றத்தில் 25-30 வரையான ஆயுதம் தரித்த இராணுவத்தினர் இராணுவ சீருடையுடன் நின்றிருந்தனர்.

என்னை வெளியே வருமாறு அழைத்தர்.இவர்களது செயலும் மிரட்டலும் வித்தியாசமாக தோன்றியமையினால் என்னுடை மனைவியை தூக்கத்திலிருந்து எழுப்பி சொன்னேன் வெளியே ஆமிக்காரர் வந்து நிற்கிறார்கள் என்னை வெளியே வருமாறு கூப்பிடுகிறார்கள் வெளியே வந்து ஆட்களைப் பார்த்து வை நாளை யாரென்று சொல்வதற்கு தெரியவேணும் அல்லவா என்று சொன்னேன் இதைக் கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் நின்ற இராணுவ வீரர் திடீரென வெளியேறி இருட்டுக்குள் மறைந்து நின்றார்.வெளியே நின்றவர்கள் மனைவியை வெளிய வரவேண்டாம் என்று மிரட்டியதுடன் என்னை வெளியே அழைத்து மனைவியையும் பிள்ளையையும் உள்ளே வைத்து வீட்டை பூட்டி விட்டனர். நான் வெளியே நின்றவர்களிடம் நீங்கள் யார் எனக்கேட்டேன். இப்போது அது உனக்குத் தேவை தானா என ஒருவர் அடிக்க வந்தார்.

வெளியே மூன்று நட்சத்திரங்கள் பதித்த இராணுவ சீருடை தரித்த ஒருவருக்கு முன்னால் என்னை நிற்க வைத்து தமிழில் இன்னொருவர் எச்சரிக்கின்ற தொனியில் கூறினார் “நாங்கள் யார் என்ன செய்வோம் என்பது உனக்கு விளங்கியிருக்கும் உன்னைப்பற்றிய முழுமையான தகவல் அறிந்து தான் வந்திருக்கிறோம்.

இந்தியாவின் அரசியலை இலங்கையில் செய்ய முயற்சிக்காதே வெளிநாட்டுப் பணத்தில் புலியை உருவாக்க முயற்சிக்காதே நாங்கள் எங்கள் வேலையைக் காட்டத் தொடங்கினால் குகன் வந்தாலும் காப்பாற் முடியாது யார் வந்தாலும் நீயும் குடும்பமும் எங்கே போனீர்கள் எனக்கண்டறியவும் முடியாது. நாளையும் வந்து இதுபோல சொல்லிக் கொண்டு இருக்க மாட்டோம் குடும்பத்தோடு தூக்குவோம் விளங்கிக் கொண்டால் சரி தான்.

அன்புமாறனின் நம்பரைத் தா எனக் கேட்டனர்.நான் சொன்னேன் அப்படி ஒருவரை எனக்குத் தெரியாது. என்னுடைய தொலைபேசி உங்களிடம் தானே இருக்கிறது அதில் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்க என்றேன்.தொலைபேசியினை பரிசீலித்து விட்டு திருப்பித் தந்து விட்டு அவசர அவசரமாக கவனமாக இருந்துகொள் விரைவில் காணாமல் போவாய் என்று எச்சரித்து விட்டு வெளியே வரவேணாம் உள்ளே போ என்று விட்டு வெளியேறினர்.இவர்கள் வெள்ளை நிற அமைச்சர்கள் பயன்படுத்தும் ஒரு வாகனம் மற்றும் மூன்று Defender ரக இராணுவ வாகனங்களிலுமே வந்திருந்தனர்.

உடனடியாக சம்பூர் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு முறையிட்டேன். அவர்கள் என்னை காவல் நிலையத்துக்கு வருமாறு கூறினர்.வீடு புகுந்து அச்சுறுத்தியவர்கள் நான் வெளியே வந்தால் சுட்டுக் கொல்ல முடியும் அல்லது கடத்திச் செல்ல முடியும் எவ்வாறு வர முடியும் எனக்கேட்டேன். சரி காலையில் வரச் சொன்னார்கள் காலையில் நிலையப் பொறுப்பதிகாரியினைச் சந்தித்த போது இராணுவம் தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்ய இயலாது இராணுவமுகாமுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சசி (0768034374)என்பவரை சந்தித்து இது சம்பந்தமாக கூறினேன் அவர் இராணுவ அதிகாரியுடன் பேசி விட்டு என்னிடம் கூறினார்.தங்களுடைய முகாமை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை வெளியிடங்களில் இருந்து வந்தாலும் எமக்கு அறிவிக்க வேணும் ஆனால் உத்தியோகபூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை நான் விசாரித்துக் கூறுவதாக தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் இலங்கையின் சட்டத்துக்கு புறம்பானது இராணுவ ஆட்சியைச் சுட்டுகிறது. இலங்கைக் குடிமகனாக வாழ்வதற்கான அடிப்படை ஜனநாயக உரிமை மற்றும் மனிதவுரிமைகளை மறுப்பதாக தெரிகிறது.நாட்டின் அபாய நிலையினை கருத்தில் கொண்டு உயிரைப் பணயம் வைத்து அரச சேவையாற்றும் சுகாதார உத்தியோகத்தரான எனது மனைவியையும் பசியால் அவதியுறும் மக்களுக்கான நிவாரணப்பணிகளை சட்டரீதியாக மேற்கொள்ளும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதியான என்னையும் அச்சுறுத்தி மரண பயத்தை ஏற்படுத்த நினைப்பதன் நோக்கம் என்ன…? முன்னாள் போராளிகள் சமூக அந்தஸ்துடன் வாழ வழிசெய்யும் மனிதவுரிமை அவர்களுக்கு இல்லையா ……? மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வழி செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி
க.காண்டீபன்

பகிர்ந்துகொள்ள