நைஜீரியாவில் சிறைச்சாலை மீது தாக்குதல்; 1800-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

You are currently viewing நைஜீரியாவில் சிறைச்சாலை மீது தாக்குதல்; 1800-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அந்தச் சிறையில் இருந்த 1,844 கைதிகள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் தென்கிழக்கு நகரமான ஓவெர்ரியில் உள்ள சிறைச்சாலை அருகே நேற்று திங்கட்கிழமை லொறி, பிக்-அப், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வந்திறங்கிய ஆயுததாரிகள் திடீர் தாக்குதலை நடத்தியவாறு சிறைச்சாலைக்குள் நுழைந்தனர்.

இந்தத் தாக்குதலின்போதே சிறையில் இருந்த 1,800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தாக்குதலை அடுத்து காணாமல் போயிருந்த ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளனர். 35 பேர் தப்பிக்க மறுத்துவிட்டனர்.

தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பியாஃப்ராவின் பழங்குடி இயக்கத்தைச் சோ்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இந்தக் குற்றச்சாட்டை பியாஃப்ரா பிரிவினைவாதிகள் மறுத்துள்ளனர்.

இதேவேளை, தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் கையெறி குண்டுகள், இயந்திர துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அராஜகவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயல் என நைஜீரியா ஜனாதிபதி முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தியவா்கள் மற்றும் தப்பியோடியவர்களைத் தேடிப் பிடிக்க பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினார்.

இதற்கிடையில் இந்தத் தாக்குதல் தொடர்பில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பழங்குடி பியாஃப்ரா பிரிவினைவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

கடந்த ஜனவரி முதல் தென்கிழக்கு நைஜீரியாவில் பல்வேறு பகுதிளில் பொலிஸ் நிலையங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. எனினும் இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

பகிர்ந்துகொள்ள