மாகாண சபை முறையை எதிர்க்கிறேன் – கஜேந்திரகுமார்!

You are currently viewing மாகாண சபை முறையை எதிர்க்கிறேன் – கஜேந்திரகுமார்!

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் முற்றிலும் வேறுபாடு உள்ளது.

மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. எனவே மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமே அன்றி மாகாண சபை முறைமையை ஒழிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு. சில இனவாத பௌத்த பிக்குகள் இதனை புரிந்துகொள்ளாது செயற்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கு சம உரிமையுள்ளது. சிங்களவர்களை தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் கருத முடியவில்லை என்றால், இந்த நாட்டை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும்-என்றார்.

பகிர்ந்துகொள்ள