மீண்டும் பழிபோடும் எரிக் சூல்கைம்!!

You are currently viewing மீண்டும் பழிபோடும் எரிக் சூல்கைம்!!

விடுதலைப் புலிகள் மக்களையும் பணியாளர்களையும் போராளிகளையும் போர்வலயத்தில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டனர் என மீண்டும் எமது ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான பழி சுமத்தியுள்ளார் முன்னாள் நோர்வேயின் சமாதானத்தூதுவர் எரிக் சூல்கைம்.

1998 இல் இருந்து 2009 வரை தாம் நேர்மையாக சமாதன முன்னெடுப்பை செய்துள்ளதாக தெரிவித்த எரிக் மீண்டும் விடுதலைப் புலிகள் மீது வசை பாடியது மட்டுமல்லாமல் இந்திய ஆக்கிரமிப்பு படைகளை அனுப்பி தமிழீழ மக்களை அநியாயமாக கொன்றொழித்த ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலைப்புலிகள்தான் என தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன்னிடம் கூறியதாக புரளியை கிளப்பியுள்ளார்.

தமிழ் மக்களின் இனவழிப்பிற்கு மூலகாரணமாக நின்றதோடு மட்டுமல்லாது பக்கச்சார்பான சமாதான முன்னெடுப்பை மேற்கொண்டு எமது விடுதலை இயக்கத்தினை சமாதான முன்னெடுப்பிற்கூடாக சிதைத்து சின்னாபின்னப்படுத்திய எரிக் போன்றவர்கள் கடைசிவரையும் இயக்கத்தை பணியவைத்து இலட்சியத்தை கைவிடச்சொல்லி கைகுடுத்தார்களே தவிர இனத்தின் விடுதலைக்கா இதயசுத்தியோடு எந்த பேச்சுவார்தை மேசைகளிலும் பேசவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இப்போது அடிக்கடி தங்களின் பக்கச்சார்பு சமாதான முன்னெடுப்பை மூடி மறைக்க விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதில் எரிக் போன்ற விசமிகளின் விசமத்தனமான கருத்துக்கள் வெளிக்கிளம்புவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு விடுதலைப்புலிகள் அடிபணியாது நந்திக்கடல்வரை சொந்த நாட்டின் விடுதலைக்காக கொண்ட கொள்கையில் உறுதிதளராது போராடுவார்கள் என்று இந்த எரிக் போன்ற எடுபிடிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை இதனால்த்தான் இன்னும் சினம்கொண்டுள்ளார்கள் இந்த வெள்ளைச்சாமிகள்.

எப்படித்தான் குற்றி முறிந்தாலும் எமது இனத்தை நீங்கள் எல்லோரும் இணைந்து அழித்ததை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.

பகிர்ந்துகொள்ள