மேய்ச்சல் தரை கபளீகரத்திற்கு எதிராக போராட்டம்!

You are currently viewing மேய்ச்சல் தரை கபளீகரத்திற்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையை பெரும்பான்மை மக்கள் அத்துமீறி பிடிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து  பேரணியாக பிரதேச செயலகம் வரை சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவிலுள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல் ஏற்றம், காத்தாடியார்சேனை, பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடி வெட்டவிச்சுகுளம் ஆகியன பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சில வருடங்களாக  பெரும்பான்மை மக்கள் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிக்கப்படுவதுடன் முட்கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மேய்ச்சல் தரை அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  காலை 10 மணியளவில் பட்டடிப்பளை பிரதேச சபைக்கு முன்னாள் ஒன்று கூடிய கால்நடை பண்ணையாளர்கள்,  அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து அங்கிருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை ஆர்ப்பாட்டமாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனையடுத்து இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்து அங்கிருந்து விலகிச் சென்றனர்.

பகிர்ந்துகொள்ள