யாழில் ஆலயங்களில் மாவீரர் நாளாம் நீதிமன்றில் தடைகோரிய பொலீசார்!

You are currently viewing யாழில் ஆலயங்களில் மாவீரர் நாளாம் நீதிமன்றில் தடைகோரிய பொலீசார்!

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும எனக் கோரி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ் வழக்கில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

“பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்” என சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்திருந்தார்.

அதனால் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், அனைத்து பிரதிவாதிகளுக்கும் அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

பகிர்ந்துகொள்ள