யாழில் விசர்நாய் கடிக்குள்ளான இருவர் உயிரிழப்பு!

You are currently viewing யாழில் விசர்நாய் கடிக்குள்ளான இருவர் உயிரிழப்பு!

இரு வேறு தினங்களில், விசர் கடிக்குள்ளான இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தெருநாயின் கடிக்குள்ளான 15 வயதுடைய பாடசாலை மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.  

துறைவி சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் தரம் 11இல் கல்வி கற்ற மாணவனான தவச்செல்வன் தர்ஷன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நாய் கடிக்குள்ளானவர் உரியமுறையில் சிகிச்சை பெற்றிருக்கவில்லை என கூறப்படுகிறது.

நேற்றையதினம் நெஞ்சு வலியினால் அவதிப்பட்ட குறித்த சிறுவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உரிய முறையில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்த போதும் அவர் பின்னர் சுய நினைவின்றி காணப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த சிறுவன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, விட வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் தாய்க்கும் மகனுக்கும் கடித்துள்ள நிலையில் தாய் உரிய முறையில் சிகிச்சையைப் பெறத் தவறிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.

மன்னார் – தாழ்வுப்பாடு பகுதியைச் சேர்ந்த ஜெபநேசன் பிஜிதாரோ  கொன்சிலிக்கா வயது 39 என்ற தாயே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 13ஆம் திகதி வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி ஒன்று விளையாடும் போது நகத்தினால் கீறி உள்ளது. தாய் தனது மகனுக்கு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொடுத்திருந்த போதும், தனக்கு சிகிச்சையைப் பெற தவறியுள்ளார்.

இந்நிலையில், இந்த மாதம் 21ஆம் திகதி திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மேற்படி குடும்ப பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 22 உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பகிர்ந்துகொள்ள