யாழ் மாவட்டத்தில் 1ம் திகதி முதல் சந்தைகள் திறக்கப்படும்!

You are currently viewing யாழ் மாவட்டத்தில் 1ம் திகதி முதல் சந்தைகள் திறக்கப்படும்!

எதிர்வரும் திங்கட்கிழமை (01) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

‘யாழ் மாவட்டத்தில் தற்பொழுது இயல்புநிலை படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுச் சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலராலும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநரும் சில பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபை, உள்ளுராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதன்படி தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மீளத் திறப்பது குறித்து தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

1ம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயல்படுத்தக் கூடியவாறாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

இது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம். அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதன்போது பொது மக்கள், சுகாதார நடைமுறையிணையும் சமூக இடை வெளியினையும் பின்பற்றி சந்தையினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன்.

யாழ் மாவட்டத்தின் மிகப்பெரிய சந்தையாகிய திருநெல்வேலி சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என உள்ளூராட்சி சபையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையும் அப்பகுதி வீதியினை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம்.’. – இதேவேளை.

இதேவேளை,

‘அத்துடன், 1ம் திகதியில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அனைத்து சேவைகளும் முழுமையாக இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஏற்பட்ட அம்பன் சூறாவளி தாக்கத்தின் காரணமாக 130 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களது விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு முற்பணமாக பத்தாயிரம் ரூபா வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அதன்படி ஏழு குடும்பங்களைத் தவிர அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பை நாங்கள் மதிப்பீடு செய்து அவற்றை விவசாய அமைச்சுக்கும் துறைசார்ந்த பிரிவுகளுக்கும் அனுப்பியுள்ளோம்.

இழப்பு தொடர்பாக நாங்கள் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கின்றோம். குறித்த இழப்புக்கள் தொடர்பில் எமக்கு ஏதாவது பணிப்புரை வழங்கப்படுமிடத்து உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்’. – என்றார்.

பகிர்ந்துகொள்ள