வடக்கில் கொரோனா தடுப்பு – கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

You are currently viewing வடக்கில் கொரோனா தடுப்பு – கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

வடக்கு மாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் மாகாண சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்றது. வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன

அடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனப்படுத்தபட்டு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல

பொது மக்கள் ஒன்று கூடும் வைபவங்கள், நிகழ்வுகள், விழாக்களை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தல். ஏற்கனவே ஒழுங்கு செய்யபட்ட குடும்ப நிகழ்வுகளை (திருமண விழா, புப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள், அந்தியேட்டி) மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் மிக அவசியமான உறுப்பினர்களுடைய பங்குபற்றுதலோடும் பாதுகாப்பாக நடாத்துவதனை உறுதிபடுத்தல்.

அரசாங்கத்தால் அறிவிக்கபட்ட 14 நாடுகளில் இருந்து (ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஒஸ்ரியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெய்ன், சுவிஸ்ஸர்லாந்து, ஐக்கியராட்சியம், பெல்ஜியம், நோர்வே,) குறித்த காலத்துக்குள் (மார்ச் 1 இல் இருந்து) வருகை தந்தவர்கள் தங்களை தனிமைபடுத்துவதோடு, ஏற்பாடு செய்திருக்கும் சகல விசாரணை மற்றும் பரிசோதனைகளுக்கு தங்களை அவசியம் உட்படுத்த வேண்டும்.

முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த பயணிகள் மறு அறிவித்தல் வரும் வரை செல்வதை தடுத்தல்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 15.03.2020 சுற்றறிக்கைக்கு அமைவாக ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி சபைகள், போன்றவற்றிற்கு பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகளைத்தவிர இதர காரணங்களுக்காக செல்வதை தவிர்க்க வேண்டும்.

மோட்டார் வாகன வரி அனுமதி பத்திரங்களை 17.03.2020 தொடக்கம் 31.03.2020 வரை புதுப்பிக்க இருப்பவர்களுக்கு புதுப்பித்தல் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளது. இவ் அறிவித்தல் போக்குவரத்து பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் பிரத்தியேக புறக்கிருத்திய மற்றும் கல்விசார்ந்த நிகழ்ச்சிகள், பிரதேச மட்ட கழக விளையாட்டு நிகழ்வுகள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது அமைப்புக்களின் மக்கள் ஒன்று கூடும் சகல நிகழ்ச்சிகளும் இருவாரங்களுக்கு தடை செய்யப்படுகிறது.

பொது போக்குவரத்து வாகனங்கள் பூரண கிருமித்தொற்று நீக்கலுக்கு அவசியம் உள்ளாக்கபடல் வேண்டும். மேற்குறித்த தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அனைவருடைய பாதுகாப்பையும் கருதி பொறுப்புணர்வோடு செயற்படுத்துவதென இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள