வடக்கில் பல நிபந்தனைகளுடன் ஆலய வழிபாடுகள்!

You are currently viewing வடக்கில் பல நிபந்தனைகளுடன் ஆலய வழிபாடுகள்!

வடக்கு மாகாணத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கான புதிய விதிமுறைகளை மாகாண சுகாதார திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

14 விதிமுறைகளை சுகாதார திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது. இந்த விதிகளை பின்பற்றியே வழிபாட்டு தலங்கள் இயங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1. வணக்கத் தலங்களில் ஆகக் கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படுகின்றது.

2. வழிபாடுகள் நடாத்தும் போது இருவருக்கிடையேயான இடைவெளி ஒரு மீற்றர் இருப்பது கட்டாயமாகும்.

3. ஆலயத்தின் வாசலில் கைகழுவும் வசதிகள் கட்டாயம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் உள்நுழையும் வாசல்களை குறைப்பதனால் மக்களின் உள் நுளைதலைக் கட்டுப்படுத்தலாம்.

4. வழிபாட்டுத் தலத்தில் கடமையாற்றும் சமயப் பெரியார் எவராவது சுகவீனமுற்றிருந்தாலோ அல்லது காய்ச்சல், இருமல், தொண்டைநோ போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலோ அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும். 

அவர் பக்தர்களுடன் தொடர்புகொள்வது முற்றாக தடுக்கப்பட வேண்டும். நோய் அறிகுறிகள் காணப்படும் பக்தர்களும் ஆலயத்திற்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

5. தேவையேற்படும் பட்சத்தில் வணக்கத்தலத்திற்குள்; உள்நுழையும் பக்தர்களின் எண்ணிக்கையை அருகிலுள்ள பொலிஸாரின் உதவியுடனும் கட்டுப்படுத்தலாம்.6. அனைத்துப் பக்தர்களும் முகக் கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானதாகும்.

7. ஆலயத்தின் சமயப் பெரியாரும் பக்தர்களைச் சந்திக்கும் போதுமுகக் கவசம் அணிந்திருத்தல் அவசியமானதாகும்.

8. சமய அனுட்டானங்களை வீடுகளில் செயற்படுத்துவதற்கு பக்தர்களை ஊக்குவிக்கவும்.

9. ஒரே குடும்பத்தினர் வழிபாடுகளோ தானங்களோ செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றுதல் மட்டுப்படுத்தப்படுவதுடன் அனைத்து சுகாதார விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

10. உணவுவகைகளோ, தீர்த்தநீரோ அல்லது பிரசாதமோ எக்காரணம் கொண்டும் வழங்கப்படுதல் ஆகாது. மேலும் இவ்வகையான உணவு வகைகளையோ புனிதநீரினையோ பக்தர்கள் தாமாக எடுக்கும் வகையில் ஆலயத்தின் உள்ளேயும், வெளியிலும் வைத்தல் ஆகாது.

11. திருப்பலியின் போதான தேவநற்கருணை வழங்கும் செயற்பாட்டின்போது நாக்கில் வைப்பதற்குப் பதிலாககைகளில் வைப்பது விரும்பத்தக்கது. பக்தர்கள் தேவநற்கருணையினை உடனடியாகவே உள்ளெடுக்க வேண்டும். 

மேலும் திருப்பலியின்போது வைன் பரிமாறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகளின்போது குருமுதல்வரானவர் முகக் கவசம் அணிந்திருத்தல் அவசியமானதாகும்.

12. பொதுமக்கள் சமயத் தலங்களில் இயலுமான அளவு குறைந்த நேரத்தைச் செலவுசெய்வதுடன் தேவையற்ற விதத்தில் உலாவுவதைத் தவிர்;க்க வேண்டும்.

13. சமயத் தலங்களுக்கான யாத்திரைகளும் குழுவாகத் தரிசித்தலும் தற்போதைய நிலைமைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. 

இதற்கு மாற்றீடாக தங்களுக்கு அண்மையிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சென்றுவரலாம்.

14. மேற்குறித்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைத்துவிதமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுவது மிகவும் கட்டாயமானதாகும். 

வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடமாகாணம்

பகிர்ந்துகொள்ள