வடமராட்சி கிழக்கில் சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல் செய்தவர்களில் ஒருவர் கைது!

You are currently viewing வடமராட்சி கிழக்கில் சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல் செய்தவர்களில் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த மே 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொதுஇடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர். சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்தனர் என்று கூறி காவல்த்துறைக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தகவல் வழங்கியிருந்தனர்.

சிறுமிகளை மீட்ட சிறீலங்கா காவல்த்துறையினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை காவல்த்துறையால் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டுவந்த மூவரில் ஒருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள