வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லையென முறைப்பாடு செய்தும் பொலிசார் அசமந்தம்!

You are currently viewing வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லையென முறைப்பாடு செய்தும் பொலிசார் அசமந்தம்!

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் வசிக்கும் உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கல்வி கற்று வந்தார்.

குறித்த மாணவியின் தாயார் கடந்த செவ்வாய் கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், பாடசாலையில் இருந்து குறித்த மாணவிகளை பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியிடம் இருந்த தொலைபேசிக்கு தாயார் அழைப்பை ஏற்படுத்திய போது பதில் கிடைக்கவில்லை. அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தாயார் தெரிவித்துள்ளார்.

அயலவர்கள் வீட்டில் சென்ற போது குறித்த இரு மாணவிகளும் வீட்டில் இல்லை. இதனையடுத்து குறித்த விடயம் தாயாருக்கு தெரியப்படுத்தப்பட தாயார் வருகை தந்து பிள்ளைகளை தேடியுள்ளார்.

அவர்கள் கிடைக்காத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை செய்த போதும் அவரை விடுவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டு பிரதியை பொலிசார் வழங்கவில்லை எனவும், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் பெற்றோர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள