ஹவுதி தாக்குதல்களை தீவிரப்படுத்த முடிவு!உலக நாடுகள் பதற்றம்!

You are currently viewing ஹவுதி தாக்குதல்களை  தீவிரப்படுத்த முடிவு!உலக நாடுகள் பதற்றம்!

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில், யெமனில் உள்ள ஹவுதி படை மத்திய தரைக்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து வகையான வணிக கப்பல்களைக் குறிவைத்தும் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்கிறது. ஒரு பக்கம் ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. இது பல மாதக் கணக்கில் தொடர்கிறது.

அதேநேரம் மற்றொருபுறம் யெமனில் உள்ள ஹவுதிக்கள் அந்தப் பக்கம் செல்லும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி கூறுகையில், “செங்கடலில் ஏவுகணைகள் மூலம் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலான ஆந்த்ரோமெடா ஸ்டார் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் தான்” என்று அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

ஹவுதி நடத்திய இந்தத் தாக்குதலில் , கப்பலில் சிறியளவில் மட்டுமே சேதம் ஏற்பட்டது. இதனால் கப்பல் அதன் பயணத்தைத் தடையின்றி தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

யெமன் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரி மேலும் கூறுகையில், “எங்கள் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க ராணுவத்தின் MQ-9 ரீப்பர் ட்ரோனையும் நாங்கள் சுட்டு வீழ்த்தி இருக்கிறோம்” என்றார்.. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இதுவரை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை இருப்பினும், ஏமனில் அமெரிக்காவின் MQ-9 சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை தான் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

காஸாவில் மோதல் ஆரம்பித்த பிறகு அமெரிக்க ட்ரோன்களை ஹவுதிகள் சுட்டு வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். முன்பு நவம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் இதேபோல அமெரிக்க ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. ட்ரோன்கள் மட்டுமின்றி, அப்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களைக் குறிவைத்து ஹவுதிகள் தாக்கும் சம்பவங்களும் கூட தொடர்கதையாகவே உள்ளது.

யெமனின் நாட்டின் அல்-முக்கா (மோச்சா) என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த MV ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற கப்பலைக் குறிவைத்து இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதைப் பிரிட்டன் இராணுவம் உறுதி செய்துள்ளது. இதேபோல இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கப்பலான எம்.எஸ்.சி டார்வினை குறிவைத்தும் ஹவுதி படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஹவுதி தலைவரான அப்தெல்-மாலிக் அல்-ஹூதி கூறுகையில், “எங்கள் இராணுவத்தின் பலம் குறைந்துவிட்டதாக சில சர்வதேச ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால், அந்த செய்திகளில் உண்மை இல்லை. தாக்குதல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். மத்திய தரைக்கடல் மட்டுமின்றி இந்தியப் பெருங்கடல் பகுதியையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இந்தப் பகுதி சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கியமான ரூட்டாக இருக்கும் நிலையில், ஹவுதி படை இப்படி தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்துவது அங்குப் பரபரப்பை உருவாக்குகிறது. இது சர்வதேச வர்த்தகத்தைச் சீர்குலைத்தது மட்டுமல்லாமல் இஸ்ரேலின் ஈலாட் துறைமுகத்தின் செயல்பாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஹமாஸ் மீதான இஸ்ரேல் போர் தொடங்கியது முதலே யெமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை கண்டித்தும் ஹவுதி கட்டுப்பாட்டில் வசிப்போர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரியளவில் தொடர்ந்து நடந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments