5 நாள் நடந்துவிட்டு தலைவனாக துடிக்கும் சிலர்!

You are currently viewing 5 நாள் நடந்துவிட்டு தலைவனாக துடிக்கும் சிலர்!

‘அவர் மழைக்குள் நனைந்து கொண்டு வந்தவர், இவர் நாலு நாளும் நடந்தே வந்தவர், அவர் சாப்பிடவேயில்லை’ அதனால் அவர்தான் தலைவர், இவர்தான் தலைவர் என்று ஒரே இரைச்சலாகக் கிடக்கிறது.

மாவீரர் பட்டியலில் கூட பெயர் வராது என்று தெரிந்தும் வெடித்தவர்கள் எத்தனை பேர்? எதிரியின் முகாமுக்குள் உள் நுழைந்து வாரக் கணக்காக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வேவு பார்த்தவர்கள் எத்தனை பேர்? நாங்கள் எல்லாம் நிம்மதியாக வீட்டில் படுத்திருக்க தினமும் மழையிலும், வெயிலிலும் எதிரியின் முகாம் முன் கிடந்தவர்கள் எத்தனை பேர்? இப்படி ஆயிரம் கதைகள்.

உதாரணத்திற்கு ஒன்று.
எல்லாளன் படை நடவடிக்கைக்காக புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியில் இருந்து புறப்பட்ட கரும்புலி அணிகள் அமெரிக்க, இந்திய ராடர்கள் / செயற்கைக் கோள்கள் சிங்களத்திற்காக தொடர்ந்து வேவு பார்த்ததன் காரணமாக சில நாட்கள் இரவு பகலாக நடந்தே அனுராதபுர வான்படைத் தளத்தை போய்ச் சேர்ந்தார்கள். போதிய உணவு/ குடி தண்ணீர் இல்லை. போதாதற்கு டன் கணக்கில் ஆயுத தளபாடங்கள். அதுவும் சாவுக்கு தேதி குறித்து விட்டு நடந்தார்கள்.
இதில் ஐவர் பெண் போராளிகள் வேறு.
நினைக்கவே கண்ணைக் கட்டுது.

இதையெல்லாம் முகநூலில் Live போட ஆளுமில்லை. தலைவர்கள் என்று கொண்டாட நாதியுமில்லை.

அதற்கு ‘அவர்கள்’ அனுமதிக்கவுமில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் வேறு. ஆனால் இப்போது நாலு கூட்டம் போட்டு விட்டு, நாலு நாள் நடந்து விட்டு ‘தலைவர்’ பட்டத்திற்கு அலையும் இழி நிலை.

இவர்கள் தலைவர்கள் என்றால் அவர்கள் யார்? கொஞ்சமாவது சொரணை வேண்டாமா?

இந்த இனத்திற்கு ஒரு தலைவன்தான். ஏனையோர்கள் அவர் வழி நின்று மக்களுக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களே.. இதை எல்லோரும் புரிந்து கொள்வது அவசியம். அதுவே விடுதலைக்கான வழியும் கூட.

இறுதியாக,
“வெற்றிகளைப் போராளிகளுக்குக் கொடுங்கள், தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தளபதிகளுக்குச் சொல்லும் தலைவர் , போராளிகளுடன் உரையாடும் போது ” வெற்றிகளை மக்களுக்குக் கொடுங்கள், அது அவர்களுக்குரியது. தோல்வியை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் ” என்பார்.

இதுதான் புலிப் பண்பாடு. அதுதான் ‘புலிப் பண்பாடு மீளுருவாக்கம் செய்யப்படாமல் இங்கு எதுவுமே சாத்தியமில்லை’ என்று 2009 இலிருந்து கூறி வருகிறோம்.

எனவே அந்தப் பண்பாட்டுக்குள் வந்து விட்டு மக்களுக்கு சேவகம் செய்யுங்கள்.
அதன் பின் உங்களைச் சுற்றியுள்ள ஒளி வட்டம் தானாகவே மறைந்து விடும்.

பிரபாகரனியம் புலிப்பண்பாடு

பரணி_கிருஷ்ணரஜனி

பகிர்ந்துகொள்ள