திரைப்பட நடிகரும் பாடகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.