அதிவேகமான “கொரோனா” பரவல்! மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்தார், நோர்வே பிரதமர்!!

You are currently viewing அதிவேகமான “கொரோனா” பரவல்! மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்தார், நோர்வே பிரதமர்!!

மிக வேகமாக “கொரோனா” வைரசு பரவல் நோர்வேயில் அவதானிக்கப்பட்டுள்ளதால், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த பரிந்துரைகளை மேலும் கடுமையாக்கியுள்ளதாக நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் நாட்டு மக்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் விதத்தில் கடுமையாக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி …

  1. தனியார் வீடுகளில், அந்தந்த வீடுகளின் நிரந்தர வதிவாளர்களை விட மேலதிகமாக 5 விருந்தினர்கள் மட்டுமே ஒன்று கூட முடியும். எனினும், விருந்தினர்களும், வீட்டின் நிரந்தர வதிவாளர்களும் ஒரே குடும்பத்தினராக இருக்கும் பட்சத்தில், அனுமதிக்கப்பட்ட 5 பேர்களுக்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி உண்டு.
  2. பலர் ஒன்று கூடக்கூடிய உள்ளக மண்டபங்கள் மற்றும் இன்னோரன்ன உள்ளக பொது இடங்களில் 50 பேர் மட்டுமே ஒன்றுகூட முடியும்.
  3. பொது வெளிகளில், மைதானங்களில் 600 வரையிலானவர்கள் ஒன்றுகூட முடியுமென முன்னதாக பரிந்துரைக்கப்படிருந்தாலும், அனைவருக்கும் இருக்கைள் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  4. சிவப்பு அபாய வலயமாக கணிக்கப்படும் நாடுகளிலிருந்து, தொழில் வாய்ப்புக்களுக்காக நோர்வேக்குள் வருபவர்கள், கட்டாயமாக 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமெனவும், ஆகக்குறைந்தது 2 முறை தொற்றுக்கான பரிசோதனைகளுக்கு தோற்ற வேண்டுமெனவும், பரிசோதனைகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் தொழில் புரிய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைநகர் ஒஸ்லோவிலும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக, ஒஸ்லோ மாநகரசபையின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansen” முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி …

அதிவேகமான
ஒஸ்லோ மாநகரசபை நிர்வாகத்தலைவர் “Raymond Johansen”
  1. தலைநகர் ஒஸ்லோவில், பொது போக்குவரத்துக்களின்போதும், மக்கள் அதிகமாக கூடும் பல்பொருள் அங்காடித்தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முகக்கவசம் / வாய்க்கவசம் அணிவதோடு, 1 மீட்டர் இடைவெளி பேணப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  2. ஒஸ்லோவின் உணவகங்களில், இருக்கைகளில் அமர்ந்திருக்காத விருந்தினர்களும், உணவாக பணியாளர்களும் முகக்கவசம் / வாய்க்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  3. ஒஸ்லோவில் உள்ளக ஒன்றுகூடல்களில் ஈடுபடுவோரில், இருக்கைகள் இல்லாதவர்களின் தொகை 50 இலிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  4. ஒஸ்லோவின் உணவகங்களில் இரவு 10 மணிக்கு பின்னதாக விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
  5. ஒஸ்லோவின் அலுவலக பணியாளர்கள், அலுவலகங்களுக்கு செல்லாமல், தத்தமது வீடுகளிலிருந்தபடியே இலத்திரனியல் உபகரணங்களின் மூலம் அலுவலக பணிகளை கவனிப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  6. ஒஸ்லோ நகரவாசிகள், வாரமொன்றுக்கு அதிகபட்சம் 10 பேர்களுக்கு மேல் தொடர்புகளை பேணுவது தவிர்க்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள