அனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

You are currently viewing அனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப பழையன கழிந்து புதியன எல்லோர் மனங்களிலும் வாழ்விலும் புகவேண்டும் என்ற நம்பிக்கையில் அனைவரும் புதுப்பானையில் புதுநெல்லில் பொங்குவோம்.

புதிய பானையில் வழிந்தோடும் வெள்நுரைபோல் எமது உள்ளமெல்லாம் இன்பம்பொங்கட்டும் இனத்தின்மேல் அன்பு பெருகட்டும்.

காலங்கள் உருண்டோடினாலும் எம் மண்ணின் கனவினை மீட்டெடுத்து பொன்னான பட்டொளி பூமியை உரசிட எண்ணங்களை நேர்நிலைப்படுத்தி தமிழர் புத்தாண்டில் சத்தியம் செய்துகொள்ளுவோம்.

பிரசவித்திருக்கும் புதிய ஆண்டில் சத்தியத்திற்காக தியாகமெய்திய எமது விடுதலைவீர்களின் வாழ்க்கை வரலாற்றை நெஞ்சிலிருத்தி சுட்டெரிக்கும் சூரியனின் தாழ்பணிந்து புதிய தமிழ்ப்புத்தாண்டை வரவேற்போம்.

தமிழ்முரசம் வானொலியின் பயணம் தமிழ் மொழிக்காகவும் தமிழரின் உரிமைக்காகவும் அயராது கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஊடகப்பணியை செய்து வருகின்றது. தொடர்ந்தும் புது நிமிர்வோடும் புதுப்பொலிவோடும் உலகப்பரப்பெங்கும் உண்மையின் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

எத்தனை தடைகள் நேர்ந்தாலும் நெறிபிறழாது மொழியின் வளர்சிக்காகவும் இனவழிப்பின் நீதிக்காகவும் எமது வானொலி தன்னாலான பணியை முன்னெடுக்கும்.

தாயகமண் திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்படுவதை கண்டும் காணாது இருக்கமுடியாது என்ற திடசங்கற்பத்தினை மனதிலிருத்தி அடக்குமுறையிலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்க தொடர்ந்தும் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலிமைப்படுத்தி ஒன்றாய் வடம் பிடிப்போமென உறுதி எடுத்துக்கொள்வோம்.

பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்! எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்!

-தமிழ்முரசம் வானொலி-

பகிர்ந்துகொள்ள